Friday 29 April 2011

அர்த்தப் பார்வை…

உடைக்குள் அடங்காமல் திமிறும்
உன் அழகைக் கண்டு திணறும் என் மனதை
தித்திக்கும் தீண்டலால்
தீப்பிடிக்க வைத்துவிட்டாய்..
உன் துப்பட்டா முனை உரசலில்
தூளாகிப்போன என் எல்லைகளைத் தாண்டிவந்து
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாய்
எதுவுமே தெரியாதவள் போல..
இது போதாதென்று
இந்த பாழாய்ப்போன காற்று வந்து
உன் கூந்தல் கலைத்து மூடிவிட்டுப் போகிறது
என் முகத்தை..
அந்த வாசம் பட்டு
எந்தன் சுவாசம் சுட்டு
நிற்கிறேன் செய்வதறியாமல்..
இப்பொழுதும்கூட என்னிடம்
எதையோ சொல்லி
சிரித்துக்கொண்டிருக்கிறாய் நீ..
மௌனமாய் என்னை
தொலைத்துக் கொண்டிருக்கிறேன் நான்..
ஒரு கட்டத்தில்..
கட்டுப்படுத்தி வைத்த காதலை எல்லாம்
ஒற்றை முத்தத்தில் கொட்டிவிடுவதென்னும் முடிவோடு
உன்னை அணைக்க முயற்சிக்கையில்..
“சரி நாளைக்குப் பார்க்கலாம்” என
மெதுவாய் நகர்ந்தாய்
என்னை அர்த்தத்தோடு பார்த்தபடி..
அடடா.. எல்லாமே தெரிந்திருந்தும்
எதுவுமே தெரியாதது போல இருக்க
எப்படித்தான் முடிகிறதோ
இந்தப் பெண்களால் மட்டும்…

No comments: