Saturday 30 April 2011

எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க..! - ஈழத் தமிழ்க் கவிதை!

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
ஆஸ்திரேலியாவில் ஓர் இந்தியன்
தாக்கப்பட்டான் என்றதும்
துடிதுடித்து எழுந்த இந்திய அரசு
கைக்கெட்டும் தூரத்தில் உள்ள ஈழத்தில்
எம்மீழத்தமிழன் கொல்லப்பட்டதற்கு
துடித்து எழாமல் தூங்கிப் போனது ஏன்..?
லிபியாவில் கலவரம் என்றதும்
லிகிதம் எழுதாமல்
வானூர்தி அனுப்பிய இந்திய அரசு
எம்மீழத்தமிழன் பிரச்சினையில்
மாற்றி மாற்றி லிகிதம் அனுப்பியது ஏன்?
எகிப்து எரிகிறது என்றதும்
இங்கிருந்து சீறும் ஏவுகணையாய்
செயல்பட்ட இந்திய அரசு
எம் தமிழீழம் பற்றி எரிந்த போது
எதுவும் செய்யாதிருந்தது ஏன்?
இந்திய விடுதலைக்காக
நேதாஜியும், பகத் சிங்கும் செய்தது
விடுதலைப் போராட்டம் என்றால்
எம்மீழத்தமிழன் செய்தது
எந்தப் போராட்டத்தினைச் சாரும்..?
எம்மீழப் புலிகள் செய்தது
விடுதலைப் போராட்டம் இல்லையா?
தமிழன் என்பவன் இந்தியனில்லையா?
தமிழினம் என்பது இந்திய இனமில்லையா?
ஏ இந்திய அரசே...
தொப்புள் கொடி உறவென்று
உனை மனதில் நினைத்த பாவத்திற்கு
எம்மீழத்தமிழன் அங்கே
மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் மிச்சம்..!
இந்திய அரசே...
அம்மக்கள் எம்மக்களே என்று
அன்று நீ துடித்து எழுந்திருந்தால்
பல்லாயிரக் கணக்கான
ஈழத்தமிழ் மக்கள்
உயிரோடு உலவியிருப்பார்கள்
உற்சாகமாய் சுதந்திரத்தை சுவாசித்திருப்பார்கள்..!
அன்று நீ சாட்டையை சுழற்றியிருந்தால்
சிங்களன் அன்றே சுருண்டிருப்பான்...
இன்று அந்த சாட்டையை
ஐ.நா. சுழற்ற ஆரம்பித்திருக்கிறது...
உதவி செய்ய வேண்டாம் நீ
அதற்கு நீ உபத்திரவம் செய்யாதே...
சிங்களனுக்கு சிகை பல்லக்கு தூக்காதே...
எம்மீழத்தமிழன் அங்கே தலை தூக்க வேண்டும்..!
எம்மீழப் புலிக் கூட்டம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்..!
(தமிழனாய் பிறந்தமைக்கு தலை நிமிர்ந்து நிற்கவா? இந்தியாவில் பிறந்ததற்கு
தலை குனிந்து நிற்கவா..? - எம்போன்ற உண்மைத் தமிழனின் மனக்குமுறல் என்று அடங்குமெனில் எம்மீழத் தமிழனின் வாழ்வு, அங்கே சுதந்திரமாய் தலை தூக்கும் போதுதான்..! தலை தூக்கும் வரை ஓயமாட்டேன்... யாரையும் ஓய விட மாட்டேன்..!


அடங்கா கோபத்துடன்

No comments: