Friday 9 December 2011

நீ நிம்மதியாப் போ..


நமது தொலைபேசி
உரையாடலை
கேட்டுக்கொண்டிருக்கின்றன
நமக்குச் சொந்தமற்ற செவிகள்.
பீறிட்டுக்கிளம்பும்  சொற்கள்
பதுங்கிக் கொண்டபின்
உலர்ந்து போன வார்த்தைகளில்
நிகழ்கிறது.
நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்
உன் ஒப்புதல் வாக்குமூலம்.

வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ
எச்சிலை விழுங்குகிறாயா?
எதைப்பற்றியும்
சொல்லவியலாச்
சொற்களைச் சபித்தபடி
ஒன்றுக்கும் யோசிக்காதே
என்கிறாய்..
உன்னிடம்
திணிக்கப்பட்ட
துப்பாக்கிகளை நீ
எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்
வாய் வரை வந்த
கேள்வியை விழுங்கிக்கொண்டு
மௌனிக்கிறேன்.
தணிக்கையாளர்களாலும்
ஒலிப்பதிவாளர்களாலும்
கண்டுகொள்ளமுடியாத
ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்
உதிர்கிறது..
தொலைபேசிகளை
நிறைக்கிறது
ஒரு நிம்மதிப்பெருமூச்சு..
நீ நிம்மதியாப் போ..

No comments: