Friday 9 December 2011

இப்படிக்கு ,

அன்புள்ள அம்மா ,

கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !


இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !

நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...

பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !

"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !

உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !

அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।

நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥

உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...

உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...

மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...




இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)

No comments: