Wednesday 28 December 2011

காதலுடன் நாமிருந்து!!!!!

அன்பே!
நாம் காதலித்த காலம்
என் நெஞ்சோடு உள்ளது
உனக்கும் கூட
உள்ளுக்குள் நினைவிருக்கா?

இனிமையான நேரத்திலும்
குளிர்சாதனப் பெட்டியிருந்து
அப்போது வெளிவந்த
தண்ணீர் போத்தல் போல்
முத்து முத்தாய்
வியர்வைத் துளிகள்
அழகிய வதனமெங்கும்!

என்னோடு நீ இங்கு
மகிழ்ந்திருக்கும் நேரத்தில்
மற்றவர் நம்மை
பெற்றவரிடம் மாட்டி
போர்க்கொடி தூக்கிடுவாரென
படபடக்கும் நம்
காதல் நெஞ்சம்!

நம்மவர் வீட்டிற்கு
நம் காதல் தெரிந்திட
வெடித்திட்ட பூகம்பத்தில்
நாம் பட்ட வேதனைகள்
சொல்லித்தான் தெரியணுமா?

நாம் பசிக்கு உண்ண
காதல் சோகமும்
தாகத்தை போக்கிட
கண்ணீர் அருவியும்
விருந்தான காலமது!

நம் காதலின் சக்தியால்
பெற்றவர் மனதை வென்று
திருமணத்தில் ஒன்றிணைந்து
காதல் செய்யும் வயது வந்த
கட்டிளம் பருவத்து
காளைக்கும் கன்னிக்கும்
பெற்றவர் ஆகியுள்ளோம்!

நாம் காதலித்த காலத்தில்
நம் பெற்றவர் போட்டு வைத்த
காதல் தடைகள் இங்கு
கனவிலும் வேண்டாம் நம்
காதல் மனங்களில்!

நம் செல்வங்கள் விரும்பிய
காதல் வாழ்க்கையை
கனிவாக சேர்த்து வைப்போம்
காதல் ஜோடிகளாய்
காதலுடன் நாமிருந்து!

No comments: