Friday 9 December 2011

பின்னொரு பொழுதில்....


அடர்ந்ததாயும் ,
ஆகாயத்தின் பரந்த வெளியில்
திசைகளின்றி திரிவதாயும்
நகரும் ஓவியமாயும் இருக்கின்ற மேகம்
நொடிப் பொழுதேனும்
ஒளிகற்றைகளை உள்வாங்கிக்கொண்டு
இருளின் அறிமுகத்தைச் செய்து ,
பிழியப்படுதலை விரும்பாது
அனுமானிக்க முடியாத கணத்தில்
பொழிதலை துவங்குகிறது.

கரையத்துவங்கும் கார்மேகம்
பெருமழையாய் மாறி
தீண்டியவற்றை எல்லாம்
கரையச் செய்து ,
நிலத்தின் ஏற்ற இறக்கங்களில்
தன் இருத்தலை உணர்த்திவிட்டு
அங்கும் இங்கும் எங்குமாய்
எல்லாமுமாய் எல்லாவற்றிலுமாய்
நிரம்பி வழிகிறது .
பின்னொரு பொழுதில்
எல்லாமும் நின்றுபோய்
வெறுமையும் நிசப்தமும்
ஆட்கொண்ட பொழுதில்
இளந்தளிரின் நுனியிநூடே
துளிகளாய் வடிந்து
பிரபஞ்சத்தின் பேரிசை
ஒன்றை விட்டுச் செல்கிறது ..

உன் விரல்நுனி எப்பொழுதாவது
இந்த பேரிசைக்கான குறிப்புகளை
என்னில் விட்டுச்சென்றதுண்டு ....

No comments: