Wednesday 14 December 2011

தோழி ஒருத்தி வேண்டும்!!!!


வையகம் தன்னில்
நான் வாழும் கதை கேட்க
புக்ககம் தன்னில் நான்
புகுந்த கதை சொல்ல....
பிள்ளைகள் ஈன்று நான்
பேறு கண்ட நிலை காண
தோழி ஒருத்தி வேண்டும்.....
கொற்றவன் கொண்ட
காதலை சொல்ல
நாணம் கொண்டு
நான் நகைப்பதை ரசிக்க...
கொள்ளை இன்பம் கொண்ட
கதைகள் கோடி சொல்லி
கிள்ளிச் சிரிக்க
தோழி ஒருத்தி வேண்டும்
வான் சுமக்கா சுமை தனை
யான் சுமந்த கதை கேட்க
துள்ளித்திரிந்த நான் துவண்டு
போனதை பார்க்க
துயர்தனை துடைத்து
என்னை தோளிலிட்டு தாலாட்ட...
மடியமர்த்தியென்னை
மஞ்சம் சேர்த்து தூங்கவைக்க
காரணமில்லாக் காரணத்திற்கெல்லாம்
கரைந்த போது
கண்ணீர் துடைக்க.....
கள்ளமில்லா உள்ளத்தோடு
நானிருக்கேன் உனக்கடி
எனச்சொல்ல
தோழி ஒருத்தி வேண்டும்
அஞ்சி நடுங்கி நான்
அடியமையானதை சொல்ல
தஞ்சம் எனக்கொள்ள
நெஞ்சம் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க....
அக்கரை கனவுக்கு நான்
ஆசைப்பட்டதை சொல்ல
இக்கரையைக் கூட நான்
இழந்த நிலை காண....
அண்டை வீட்டார்க்கு
நான் அரசியாய் இருக்க
அடுப்படிக்கு கூட நான்
ராணியில்லை என உணர்த்த......
இச்ஜெகம் என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
துயர்தனில் வாழும்
வெட்கம் கெட்ட
என் வேதனை சொல்ல
தோழி ஒருத்தி வேண்டும்!!!!
பசித்தும் உண்ண மறுக்க
விரல் நுனி தீண்ட
அவள் ஊட்டும் பருக்கை உண்ண....
உறவென்று சொல்லி
என்னை தேற்ற
தோழி எனச் சொல்லி
யாழிசை பாடிட.....தாயாய்
தோழி ஒருத்தி வேண்டும்!!!!

No comments: